அபிவிருத்தியடைந்து வரும் எமது இலங்கை நாட்டின் இன்றைய காலகட்ட சூழ்நிலையானது இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்தத்தின் பாதிப்புக்களையும் தாண்டிய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை மையப்படுத்தியதாக காணப்படுகின்றது. இதனால் மாதாந்த வருமானத்தைக் காட்டிலும் அதிகரித்த பொருட்களின் விலையிலே பல்வேறு குடும்பங்களின் சுமையான எதிர்காலம் தங்கியிருக்கின்றதென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
பொருளாதார மையமான நாடாக காணப்பட்ட இலங்கையில் இன்று பொருத்தமான வேலை வாய்ப்பின்மை, அரசாங்க வேலை வாய்ப்புக்களை எதிர்ப்பார்த்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கி இன்றைய இளைஞர் சமுதாயமானது பல சவால்களை எதிர்நோக்கியதாக காணப்படுகின்றது.


அந்த வகையில் இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வண்ணம் தன்னம்பிக்கையையும் உழைப்பினையும் முதலீடாகக் கொண்டு தாமாகவே முயன்று தடைகளை எதிர்கொண்டு தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வண்ணம் சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது என்பது எமது தலையாய கடமையாகும்.
அதனடிப்படையில், முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு தமது உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற, உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான பொறிமுறைகளை எதிர்பார்த்திருக்கும் தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கான ஆலோசனைகளையும் பிரயோகிக்கத்தக்க வழிமுறைகளையும் நாம் வழங்கி வருகின்றோம்.





இச்செயற்பாட்டினை முன்னெடுப்பதன் மூலம் நாளைய தொழிலதிபர்களுக்கான அடித்தளமாக அமைவதோடு மட்டுமன்றி வேலை வாய்ப்பில்லாத இளைஞர், யுவதிகளுக்கான வாய்ப்பாகவும் அமையும். அவ்வாறே, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், சுயதொழிலை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தினையும் முன்னேற்றுவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாறான சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதன் முலம் அவர்களை முன்னுதாரணமாகக் கொண்ட ஒரு இளம் சமுதாயத்தைத் தோற்றுவிக்க முடியும்.





இவ்வாறு எமது சமுதாயத்தில் பல தொழில்முனைவர்கள் காணப்படுவதனால்
நீண்ட கால அபிவிருத்தியை நோக்கிய இந்தப் பயணத்தில் நீங்கள் உதவிட விரும்பும் பட்சத்தில் அவர்களின் திட்டங்களையும் விபரங்களையும் விரிவாக எங்களால் அனுப்பி வைக்க முடியும்.
மேலதிக விபரங்களுக்கு,
நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை
https://wa.me/+94777105569